வருட இறுதியில் அலுவலகத்தில் வேலை கம்மியாக (யாருப்பா அது - வேலை அதிகமாக இருந்தா மட்டும் நீ என்ன பண்ண போறனு கேட்கறது) இருக்கும். அதனால் எங்காவது சுற்றுப்பயணம் செல்லலாம் என்று முடிவு செய்து என் அலுவலக நண்பர்களிடம் கேட்டேன். அவர்களும் போகலாம் என்று சாடை கூறியதால், எங்கு செல்லலாம் என்று கூகிள் ஆண்டவரை தேடினோம். வழக்கம் போல் அது பல இடங்களை காட்டியது. முதலில் கொடைக்கானல், செல்லலாம் என்று முடிவு செய்த போது யாரும் ஆர்வம் காட்டவில்லை. பின்பு கடவுளின் தேசமான கேரளா செல்லலாம் என்று முடிவு செய்தபோதும் சேம் பிளட்தான்.
சரி வடமாநிலங்கள் பக்கம் ஏதாவது இருக்கிறதா என்று தேடிய போது கிடைத்த இடம் தான் - இந்தியாவின் மிக உயரமான (எந்த பாறையின் மீதும் மோதாமல் நேராக தரையில் விழம்) ஜோக் (Jog) நீர்வீழ்ச்சி சிக்கியது. மற்றவர்களுக்கும் இந்த இடம் பிடித்து போக, அதன்படி வேட்டைக்காரன் (சரி விடுங்கப்பா, அவதார்) ரிலீஸ்க்கு முந்தின நான் கிளம்பி 18, 19 மற்றும் 20ம் தேதி பார்த்துவிட்டு வரலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

ஒரு நீர்வீழ்ச்சியை காண 800 கிலோமீட்டர் செல்ல வேண்டுமா என்று தயக்கம் வேறு. அதனால்
Teambhp-யை தேட ஆரம்பித்தேன். வழக்கம் போல் அது ஜோக் (Jog) சுற்றி உள்ள பல இடங்களை கொட்டியது. ஆனால் எங்களுக்கு இருந்ததோ மூன்று நாட்கள் மட்டுமே.
அதனால் 18ம் தேதி ஒகேனக்கல் சென்று பார்த்துவிட்டு, பின்பு அங்கிருந்து மதியம் கிளம்பி பெங்களூரு சென்று - இரவு தங்கி விடுவதாக திட்டம். ஆனால் நாட்கள் நெருங்க நெருங்க நாங்கள் போட்ட திட்டம் மாறிக்கொண்டே (ஒகேனக்கல் இப்பொழுது எங்கள் பிளானில் இல்லை) மற்றும் நண்பர்கள் (அலுவலகத்தில் என்னுடன் சேர்த்து நான்கு, பெங்களுரூறில் இருந்து மூன்று) எண்ணிக்கை குறைந்து கொண்டே இருந்தது. பெங்களுரூ நண்பர்கள் நிறைய ஆனி புடுங்க இருந்த காரணத்தால், விடுப்பு எடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.

சரி சென்னையிலிருந்து நான்கு பேர் கிளம்புகிறோம் என்று பார்த்தால் அங்கேயும் ஒரு திருப்பம் (வளைவு இல்லப்பா ட்விஸ்ட்). நால்வரில் ஒருவர் சொந்த காரணங்களுக்காக வர இயலாது என்று கூறியதால் – அப்ப ஊட்டிக்கு ச்சீ ஜோக் -கு தனியாகதான் செல்ல வேண்டும் போல என்று நினைத்திருந்தேன். ஆனால் கடைசி நேரத்தில் சக ஊழியர் ஒருவர் சரி என்று கூறியதால் நாங்கள் திட்டமிட்டப்படி கிளம்ப தயாரானோம்.
17-ம் தேதி மாலை 5 மணிக்கு கிளம்புவதாக திட்டம், கிளம்பி இரவு பெங்களூருரீல் தங்கிவிட்டு மறுநாள் விடியற்காலை கிளம்பி ஷிமோகா போய் ரூம் எடுத்து கொஞ்சம் களைப்பாறிவிட்டு, அருகில் உள்ள இடங்களை பார்க்கலாம் என்று முடிவு செய்து இருந்தோம். நினைப்பதெல்லாம் எங்கே நடக்கிறது, நாம் ஒன்று நினைக்க கடவுள் மற்றொன்றை நினைக்கிறார் போலும்.
ஐந்து ஆறாகியது, ஆறு எட்டாகியது. அனைவரும் ஒன்று கூடி நாங்கள் புறப்பட்ட பொழுது நேரம் சரியாக ஒன்பது மணி, பூந்தமல்லி தாண்டி தேசிய நெடுஞ்சாலையை தொட்ட பொழுது இரவு 10.௦0 மணி ஆகிவிட்டது. சும்மா சொல்லக் சொல்லக்கூடாது சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலை சும்மா பளபளனு இருக்குப்பா. நாங்கள் அலுவலக கதைகளை பேசிக்கொண்டே சென்றதால் நேரம் போனதே தெரியவில்லை. யாருக்கும் மது அருந்தும் பழக்கம் இல்லாததால் எல்லா பச்சை போர்டு கடைகளும் எங்களை பார்த்து சிறிது கொண்டு (தண்ணி அடிக்காம என்னங்கடா உங்க சுற்றுப்பயணம் – யாரோ கேட்பது புரிகிறது) இருப்பது போல் ஒரு பிரம்மை.
சுமார் ஒரு மணியளவில் ஒசூர் தாண்டி விட்டோம். அப்பொழுது...
அது அடுத்த பதிவில்...
டிஸ்கி: நான் வேற என்னத்த கேட்க போறேன், பிடிச்சு இருந்த தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க, இல்லைனா பின்னூட்டம் போடுங்க.